இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில், வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

🕔 October 31, 2017

லங்கை – கட்டார் நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின் ஜாஷிம் பின் முஹம்மட் அல் தானி ஆகியோருக்கு இடையில் இந்த முக்கியத்துவம்வாய்ந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

உல்லாசப் பயணத்துறை, சமையல் எரிவாயு, விமானப்போக்குவரத்து உள்ளடங்கிய இன்னோரன்ன துறைகளில் பரஸ்பர நாடுகளின் மேம்பாடு  தொடர்பிலேயே ஒப்பந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்றைய அமர்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் கட்டார் நாட்டின் வர்த்தக அமைச்சரும் சிறப்புரையாற்றினர். இரண்டு நாடுகளினதும் நீண்டகால உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து இருவரும் தமது உரையில் சிலாகித்துப் பேசினர்.

கைத்தொழில் மற்றும் வரத்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களம், சர்வதேச மூலோபாய அமைச்சின் கீழான ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுங்கத்திணைக்களம். வெளிவிகாரத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்றுக் காலை ஆரம்பமான கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் இரண்டு நாள் அமர்வுகள் இன்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் கொழும்பு வந்திருந்த கட்டார் வர்த்தக அமைச்சர் தலைமையிலான 20 பேர் அடங்கிய உயர் மட்ட வர்த்தகத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

(அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்