கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன்

🕔 August 8, 2015

Chanrakandan - 02

– எம்.வை. அமீர், வி. சுகிர்தகுமார் –

ல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கல்முனை நகர் பகுதியில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் காரியாலயத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

தமிழ் மக்கள் எந்த சமூகத்தின் உரிமைகளையும் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏனையவர்கள் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. தமிழர்களும் முஸ்லிம்களும் விட்டுக்கொடுப்போடு வாழாது விடுவோமானால், பேரினவாதிகள் எங்களுக்கிடைலுள்ள பிளவுகளைப் பயன்படுத்தி, அவர்களின் இலக்கை அடைந்து விடுவார்கள்.

சிலர், தங்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காகவும், இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவும், வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். இவர்கள் விடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

ஒரு பக்கத்தில், தமிழர்களின் காணிகள் நூதனமான முறையில் அபகரிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் விடப்பட்டுள்ளன. இதேவேளை, தமிழர் பிரதேசங்களின் எல்லைகளில் ஆக்கிரமிப்புக்களும் நடந்து வருகின்றன.

ஐக்கியதேசியக் கட்சியியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழர்களின் அபிலாசைகளைக் கேளாது, கல்முனை அபிவிருத்தி சம்மந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால், கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்காக பாடுபடுவேன். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சரியான முறையில் அணுகக்கூடியவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

கடந்தகாலங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பாரிய நெருக்குதல்களுக்கு எதிராக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நான் குரல்கொடுத்தேன்.

‘வென்றாகவேண்டும், தமிழ் ஒன்றாக வேண்டும்’ என்ற தாரக மந்திரத்தை, எனது தந்தையார் முழு மூச்சாகக் கொண்டு செயற்பட்டமையின் காரணமாக, அவருக்கு துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கப்பட்டன. எனது தந்தை சந்திரநேருவின் வழியில், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகப் பேராடுவேன்.

தமிழ் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை பணத்துக்கோ அல்லது ஏனைய பொருட்களுக்குமோ தாரை வார்த்து விடக் கூடாது. கூடமைப்பின் சின்னமான வீட்டுக்கும் வாக்களிப்பதோடு, நான் தகுதியானவன் என நீங்கள் கருதினால் எனக்கும் வாக்களிக்களியுங்கள்’ என்றார்.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான முருகேசு நடேசனும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். வலியுறுத்தினார்.Chanrakandan - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்