ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு

🕔 September 25, 2017
– எம்.ரீ. ஹைதர் அலி –

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபையின் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக உதவிப் பொருட்களை கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் கையளித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 85வது அமர்வான இறுதிக்கு முந்திய அமர்வு இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபையினால் தனக்கு வழங்கப்பட்ட மாதாந்த சம்பளத்தில் மக்கள் பணிக்காக செலவு செய்த தொகை தவிர்ந்து மீதமாகவுள்ள தொகை, கிழக்கு மாகாண சபையின் அமர்வுகளின் போது தனக்கென மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட காலை, மதிய மற்றும் மாலை நேர உணவுகளுக்காக தனக்கென மாகாண சபையினால் செலவு செய்யப்பட்ட தொகை அடங்கலாக 67,428.40 ரூபாய்க்கான காசோலை மற்றும் தனது அலுவலக நடவடிக்கைகளுக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கடித தலைப்பு காகிதாதிகள், பைல் அட்டைகள், கடித உறைகள், காகிதங்கள் உள்ளிட்ட எஞ்சிய அனைத்து அலுவலக பொருட்களையும் கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் எம்.சீ.எம். செரீப் முன்னிலையில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதியிடம் கையளித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றது முதல், தனக்கென வழங்கி வைக்கப்பட்ட சம்பளத்தில் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு ரூபாவினைக்கூட செலவு செய்யாத நிலையில். அத்தொகையினை மக்களுக்காக வழங்கியிருந்ததோடு தனது தனிப்பட்ட நிதியிலிருந்தும் அதிகளவான தொகையினை மக்கள் பணிக்காகவும் செலவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மாகாண சபையின் ஆட்சிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தனக்கென வழங்கப்பட்ட கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் ஷிப்லி பாறூக் கையளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்