இறுகும் மஹிந்த அணி; 25 நாடுகளில் கறுப்புப் பணம்: விசாரணைகள் ஆரம்பம்
– எம்.ஐ. முபாறக் –
மத்திய வங்கி பினைமுறி ஊழலில் சிக்கி, ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி மீது திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டது.
மஹிந்தவின் திருடர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் துரிதப்படுத்தாமைதான் இதற்குக் காரணமாகும்.
ரவியின் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமரைச் சந்தித்த ஐ.தே.க எம்பிக்கள், கட்சிக்கு ஏற்பட்டியிருக்கும் அவப் பெயர்பற்றி அவருக்கு எடுத்துக் கூறினர்.
மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மிக முக்கியமான ஊழல்கள் பற்றியும் வெளிநாடுகளில் கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருக்கின்றமை பற்றியும் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
அதன் அடிப்படையில் இப்போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் மஹிந்தவினுடைய சகாக்களின் கறுப்புப் பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன எனத் தெரிய வருகின்றது.
அந்த அடிப்படையில் 25 நாடுகளில் 86 கோப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தவதற்கு அந்த நாடுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாம்.
பிரிட்டனில் 39 கோப்புகள் தொடர்பிலும், சிங்கப்பூரில் 13 கோப்புகள் தொடர்பிலும், அமெரிக்காவில் 08 கோப்புகள் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு அந்த நாடுகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாம். இதுபோக, 39 கோப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்.
இனியாவது திருடர்கள் சிக்குவார்களா எனப் பார்ப்போம்.