மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு
மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூலொன்றின்றினை, ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தார்.
‘இலங்கை இந்திய சமூக அபிவிருத்திப் பணியில், முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், ஓ.எல்.எம். ஆரிப் எழுதிய நூலின் வெளியிட்டு விழா, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இவ் விழாவில் அமைச்சர் ஹக்கீம் – பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவரின் உரைகள் அடங்கிய நூலின் வெளியீடு பற்றிய செய்தியினைத் தெரிவித்தார். குறித்த நூலின் வெளியீட்டு விழா, கண்டியில் அடுத்த மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
புத்தகமொன்றை எழுதி வெளியிடுவது என்பது பிரசவ வேதனைக்கு ஒப்பானது எனவும், இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
1952 ஆம் ஆண்டு தமது தந்தையார் என்.எம்.ஏ. ரஊப், தெஹிதெனிய முஸ்லிம் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றியமையினை, தனது உரையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், நாடாளுமன்றத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் தன்னை வெற்றிபெறச் செய்வதன் மூலம், இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு, தனது பங்களிப்பைச் செய்ய உதவுமாறும் வேண்டிக் கொண்டார்.
மேற்படி புத்தக வெளியீட்டு விழாவில், தும்பனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அம்ஜாத் முத்தலிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.