பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

🕔 August 11, 2017

வியை கருணாநாயக்கவை ராஜினாமா செய்வித்து, இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மத்திய வங்கியில் இடம்பெற்ற மிகப் பெரும் ஊழல் மோசடிகளின் பின்னணியில் ரவி கருணாநாயக்க மாத்திரமில்லை. இன்னும் பலர் ஒளிந்துள்ளனர். 2015ம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் முறிகளை ஏலம் விடும் கலந்துரையாடலில், பிரதமரின் நெருங்கிய சகாவான மலிக் சமரவிக்கிரம மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய விடயங்களில் கலந்து கொண்டால் பரவாயில்லை. நாட்டின் நிதி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் நிதி விடயங்களில் சம்பந்தப்பட்டவர்கள்தான் அதில் கலந்து கொள்ள வேண்டுமே தவிர;  ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்கள் அல்லர்.

இந்த விடயமே, இதன் பின்னால் மிக முக்கியமான புள்ளிகள் மறைந்திருப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இன்னும் வெளிப்படையாக சொல்லுவதானால், இதன் பின்னால் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்க வேண்டும். இந்த விடயம் மிகவும் நீதியான முறையில் கையாளப்பட வேண்டுமாக இருந்தால், ரவி கருணாநாயக்கவுடன் சேர்ந்து, பிரதமரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ரவி கருணாநாயக்க மாத்திரம் தனது பதவியை ராஜினாமா செய்வதால் எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை. அதனை விட அதிகாரமிக்க இத் திருட்டின் பங்காளிகள் இவ்வாட்சியுடன் உள்ளனர். இந்த முறி மோசடியில் ஒரு லட்சம் கோடி இழப்பு எற்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா என்பது, மகா திருடர்கள் தப்பிப்பதற்காக அனைவரையும் திசை திருப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அது மாத்திரமன்றி, இவர் தொடர்பான விசாரணைகள் நீதியாக மேற்கொள்ளப்படுவதோடு குறித்த ஊழல் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்