லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திஸாநாயக, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
லொத்தர் சபை சட்டத்தின் படி, நிதியமைச்சர்தான் அதற்குப் பொறுப்பான அமைச்சராவார் எனவும் அவர் இதன்போது கூறினார்.
மேலும், லொத்தர் சபையையின் விடயங்களை வெளி விவகார அமைச்சர் கையாளுவதற்கான அதிகாரங்களை வழங்கும் வகையில், அந்தச் சபையின் சட்டத்தினை அரசாங்கம் திருத்தவில்லை எவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, லொத்தர் சபையினை வெளி விவகார அமைச்சுக்கு ஒதுக்கியதான் மூலம், லொத்தர் சபை சட்டம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜே.வி.பி. தலைவர், இந்தத் தவறை உடனடியாக ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி திருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது, நிதியமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயகவுக்கு வெளி விவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. இதன்போது, வேறு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் வெளி விவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றில் லொத்தர் சபையும் ஒன்றாகும்.



