ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன: நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர்
நாடாளுமன்றத்தில், ஓராண்டுக்கு முன்பிருந்தே தான் சுயாதீனமாக இயங்கி வருவதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு – தான் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
“கடந்த ஓராண்டு காலமாகவே நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இயங்கி வருகின்றேன்.
சுயாதீனமாக இயங்கி வருகின்ற போதிலும் அரசாங்கத்தை விட்டு விலகத் தீர்மானிக்கவில்லை.
கடந்த 16ம் திகதி நான் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகங்கள் ஒரு விடயத்தை மட்டுமே செய்தியாக வெளியிட்டுள்ளன.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் கொள்கைகள் தொடர்பில் எனக்கு விமர்சனங்கள் உள்ளன.
அரசாங்கத்தை நிறுவுவதற்கு முக்கிய பங்காற்றிய ஒருவர் என்ற ரீதியில், இந்தக் கருத்து அரசாங்கத்தை பாதிக்கும் என்பதனை நான் அறிவேன்.
எவ்வாறெனினும் இந்த அரசாங்கத்தை நிறுவுவதற்கு முக்கிய பங்காற்றிய காரணத்தினால், மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளிலிருந்து விலகிச் செல்ல முடியாது” என்றார்