கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம
– ஏ.ஆர்.ஏ. பரீல் –
முஸ்லிம் ஒருபோதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதை விரும்பவில்லை என்று விசேட திட்டங்களுக்கன அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே அவர்களது அபிலாசையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில், நாம் பேதங்களை மறந்து எமது சமய அடையாளங்களை பேணிக்கொண்டு இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்துடன் வாழ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நாடாளுமன்ற உரை உள்ளடங்கிய ‘முஸ்லிம்களின் பிரச்சினைகளை கேளுங்கள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு கூறினார்.
இந் நிகழ்வு புதன்கிழமை மாலை, கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.
இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
“நாம் பல இனங்களாக வாழ்ந்தாலும் இலங்கையர் என்ற அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். சிங்களவர், முஸ்லிம் மற்றும் தமிழர் என்ற பிளவில்லாது இலங்கையர் என்ற அடையாளத்துடன் இருக்கிறோம்.
13 ஆம் திருத்தச் சட்டம் பற்றிக் குறிப்பிடவேண்டும். இத்திருத்தம் பல அபிவிருத்திகளை அடையாளப்படுத்தியுள்ளது. இவற்றில் முஸ்லிம்களின் அரசியல் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைக் குறிப்பிடலாம்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழேயே 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே குழுவுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கூறியது.
இலங்கையிலிருந்து இந்திய உயர்ஸ்தானிகர் இந்த உடன்படிக்கைக்கு தரகராகச் செயற்பட்டார்.
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய டொக்டர் கலீலும் ஜே.ஆர். ஜயவர்தனவிடம் வந்தார். இந்த மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு முறையில் பாரிய பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்தார். வடக்கும் கிழக்கும் இணைவதால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் என்பதை விளக்கினார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக வடக்கும் கிழக்கும் இணைவதனால், முஸ்லிம்கள் தமது உரிமைக்கான குரலை இழந்து விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே வடக்கும் கிழக்கும் இணைவது குறித்து விவாதம் நடைபெற்றது. தமிழ் பிரதிநிதிகள் வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டும் என்றார்கள்.
இதேவேளை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ெஜயவர்தன, வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட வேண்டுமா அல்லது வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமா என்பது தொடர்பில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார். என்றாலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
ஏனென்றால் முஸ்லிம்களும் பெரும்பான்மை சிங்களவர்களும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்பது தெளிவாகியது. அதனால் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என தமிழ் அரசியல் தலைவர்கள் வேண்டினார்கள். இந்தப் பிரச்சினையையடுத்து பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினார்கள்.
இறுதியில் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கும் கிழக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. முஸ்லிம்களின் சிறப்புரிமைகள் தொடர்பாக, குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைகள் கேள்விக்குறியாகிய சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் பலமான ஆதரவாளரான டொக்டர் கலீல், ஜே.ஆர். ெஜயவர்தனவைச் சந்தித்தார். சந்தித்து ‘தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தெரியாது. நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்’ என்றார்.
இதற்குப் பிறகே கிழக்கில் முஸ்லிம்களுக்கான கட்சியொன்று உருவாகியது. இவ்வாறான சூழ்நிலையிலேயே, லக்ஷ்மன் கதிர்காமர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தனது கருத்துகளை முஸ்லிம்களுக்கு ஆதரவாக வெளியிட்டார்.
முஸ்லிம்கள் ஒருபோதும் வடக்கும் கிழக்கும் இணைவதை விரும்பவில்லை. முஸ்லிம்கள் கிழக்கில் தனியான மாகாண சபையையே கோரி நிற்கின்றனர்.
இன்று வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண சபைகள் இயங்குகின்றன. முஸ்லிம்கள் தங்களுக்கு கிழக்கில் தனியான மாகாண சபை கிடைத்துள்ளமை குறித்து மகிழ்ச்சிடைய முடியும். முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதையே விரும்புகிறார்கள்.
அஷ்ரப் முஸ்லிம்களுக்கென்று ஆரம்பத்தில் கிழக்கில் தனி கட்சியை ஆரம்பித்தார். அதன்பின்பு தேசிய ரீதியில் சகல மக்களையும் இணைத்துக்கொண்டு நுஆ கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்தார். இது சிறந்த முயற்சியாகும்.
லக்ஷ்மன் கதிர்காமர் தெளிவாக ஒரு விடயத்தை கூறியிருக்கின்றார். நாம் எந்த இனத்தவராக இருந்தாலும் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழ வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கிடையே அன்பு செலுத்த வேண்டும். எமது கலாசாரங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இலங்கையராக இருக்க வேண்டும். ஒவ்வொரு இனமும் தங்களுக்கிடையில் ஒற்றுமையாக வாழ வேண்டும்” என்றார்.