வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
– எம்.வை. அமீர் –
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள், தொடர் வேலைநிறுத்தத்தினை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தனர்.
அந்த வகையில், இன்று வியாழக்கிழமையும் இரண்டாம் நாளாக, குறித்த வேலை நிறுத்தம் தொடர்வதால், பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதேவேளை, பல்கலைக்கழகத்தின் நிருவாக அலுவலகங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும், கல்விசார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்வதால், அங்கும் மாணவர்களின் வருகை மிகக் குறைவாக உள்ளது.
மேலும், கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாததன் காரணமாக பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.