பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர எதுவுமில்லை
பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலிருந்து தங்கம் உள்ளிட்ட எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரபல வர்ததகர் ஏ.எஸ்.பி. லியனகேயின் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தின் நீர் அகற்றப்பட்டு, அதனுள் மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்ட பின்னர், குறித்த தடாகம் மண்ணால் நிரப்பப்பட்டிருந்ததாக கதையொன்று உலவியது.
மேற்படி மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் நேற்றைய தினம் நேற்று வெள்ளிகிழமை முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாளிகையின் உரிமையாளரான லியனகே, பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, குறித்த நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டிருந்த மணல் நேற்று வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் மேற்பார்வையில் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டிருந்த மண் அகற்றப்பட்ட போதும், அங்கு எவ்வித தங்கமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விஜித் குணரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் ராஜகிரிய பொலிஸாரின் மேற்பார்வையின் மத்தியில் மணல் அகற்றப்பட்டது.
பீகொக் மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ்.பி.லியனகேயின் முறைப்பாட்டுக்கு அமைய, அவரிடம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இரு மணி நேரம் விசாரணைகள் நடத்தப்பட்டன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இந்த விசாரணைகளை நடத்தியதோடு, வாக்கு மூலம் ஒன்றினையும் பதிவு செய்தது.
ஏ.எஸ்.பி.லியனகேயின் நாவல பீகொக் மாளிகையில் மணலினால் நிரப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து, எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த நீச்சல் தடாகத்தில் 35 கியூப் மணல் ஏ.எஸ். பி.லியனகேயின் செலவில் பணிக்கு அமர்த்தப்பட்ட 10 ஊழியர்களால் அகற்றப்பட்டது. அவர்கள் இந்தப் பணில் ஈடுபடுவதற்கு முன்னர் அந்த நீச்சல் தடாகத்தில் இருந்த மணலின் மாதிரிகள் பெறப்பட்டன.
பின்னர் அவ்வூழியர்களின் உடலில் இருந்த அனைத்து தங்க ஆபரணங்களும் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்தே ஒவ்வொரு பைகளாக மணல் அள்ளப்பட்டது. அதன் பின்னர் மணல்அகற்ற பெக்கோ இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த நடவடிக்கைகள் மாலை 5.00 மணி வரை நீடித்திருந்தது.
மணல் அகற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏ.எஸ்.பி.லியனகே, தற்போது தனக்கு மன நிறைவாக உள்ளதாகவும் வீணான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டதால் அதிலிருந்து தற்போது விடுதலை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்?