ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா
அஸ்ரப் ஏ. சமத் –
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 05 ஆண்டுகளில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினூடாக தீர்வினைக் கண்டு விடப் போவதாகவும், அதன் பின்னர் அந்த அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டுமெனவும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பம்பலப்பிட்டியிலுள்ள புனா்வாழ்வு அதிகார சபையில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, மீள்குடியேற்ற அமைச்சா் சுவாமிநாதன், ராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் .பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிா் மற்றும் மேல் மாகணசபை உறுப்பினர் ஏ.ஜே. பாயிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இங்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தொடர்ந்து உரையாற்றுகையில்;
“இந்த அமைச்சுப் பொறுப்பினை எனக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், யுத்தத்தினால் பாதிக்கபட்ட சகல மக்களின் பிரச்சினைகளுக்கும், இந்த அமைச்சினூடாக எதிர்வரும் 05 வருடங்களுக்குள் நல்ல திட்டங்களை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்தி தீர்வு காணவுள்ளோம். அதன் பின்பு இவ்வாறனதொரு மீள்குடியேற்ற, புனா் வாழ்வு அமைச்சு ஒன்று தேவையில்லை. இந்த அமைச்சினை மூடி விட வேண்டும்.
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக, மக்கள் வாழ்வாதார உதவி நிறுவனங்களுடாக, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு உதவ வேண்டும். இன்னும் 50 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேறாமல் உள்ளன. அத்துடன் இந்தியா போன்ற நாடுகளிலும் இலங்கை அகதிகள் வாழ்கின்றனா். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் கிராமங்களில், இன்றும் கூட – வீட்டுப்பிரச்சினையுடன், அடிப்படை வசதிகளற்ற பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவா்களின் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க வேண்டியுள்ளது.
அமைச்சர் சுவாமிநாதனின் தலைமையின் கீழ், இந்த அமைச்சின் சேவைக்காக என்னை அர்ப்பணிப்பேன்” என்றார்.