முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர்

🕔 November 6, 2018

முஸ்லிம் அரசியல் கட்சிகள், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமது நிலைப்பாடுகளை எடுக்கும் தருணங்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை (உலமாக்களை) அழைத்து ஆலோசனை கேட்பது முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

அரசாங்கக் கட்சியின் பக்கமோ அல்லது எதிர்க்கட்சியின் பக்கமோ மாறிச் செல்லுகின்ற அவசியம் ஏற்படுகின்ற தருணமொன்றில், உலமாக்களை அழைத்து முஸ்லிம் கட்சிகள் ஆலோசனை கேட்பது ஆரோக்கியமானதல்ல.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருந்த கூட்டில் இருப்பதாகவோ அல்லது புதிய கூட்டில் சங்கமிப்பதாகவோ தீர்மானம் எடுக்கின்ற நிலையில், இத்தீர்மானம் எடுக்குமாறு உலமாக்கள்தான் சொல்லியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பெரிய இரு கட்சிகளினதும் சிங்கள ஆதரவாளர்கள் வருவார்கள்.

இது முஸ்லிம் சமூகத்துக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்மானங்களை எடுத்து பக்கம் மாறுவது காலாகாலமாக நடந்து வருகிற, பேரினத்துக்குப் பழக்கப்பட்ட நடைமுறையாகும்.

ஆனால் மதத் தலைமைகளின் ஆலோசனையின் பேரில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளிவராததால் சிங்களவருக்கு அது பற்றித் தெரிந்திருக்கவில்லை.

சமூக ஊடக வெளிச்சம் பரவிப் பாய்கிற இன்றைய காலத்தில் ரகசியம் என்று ஏதுமில்லை.

இது மட்டுமல்ல கட்சித் தலைவர்கள் தங்கள் தலையைத் தப்ப வைப்பதற்காக ஊடகங்களூடாக மார்க்கத் தலைவர்கள் கூறியபடிதான் தீரமானம் எடுக்கப்பட்டது என்ற செய்தியைக் கசிய விடுவார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

எனவே, இவ்வாறான தீர்மானத்துக்கு மார்க்கத் தலைவர்கள்தான் காரணம் என கதையோ,செய்தியோ பரவினால், எடுத்த தீர்மானத்தால் பாதிப்படைகிற பெரிய கட்சியின் சிங்கள- பௌத்த ஆதரவாளர்களுக்கு இஸ்லாத்தின் மீது கோபம் மூழும்.

இந்த கோபம், அரசியல் தலைவர்களின் மீதான கோபத்தைக் கடந்து முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் சூழ்ந்து கவ்விப் பிடித்து கடித்துக் குதறுவதற்கான சந்தரப்பம் உள்ளது.

இது மாத்திரமல்ல, பல வருடங்களாக முஸ்லிம்களின் மீது சிங்கள தீவிரவாத இயக்கங்களினால் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டு வன்மம் வளர்ந்து வந்திருக்கிறது.

மேலும், இரண்டு பெருங்கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் பல தடவை, பல மதத்தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. இவ்வாறே மக்களும் வன்முறையை சந்தித்துள்ளனர்.

இவ்வாறு நீண்டகாலமாக நீரில் ஊறிய உரிமட்டையின் நிலையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்கும் அரசியல் மற்றும் மார்க்கத் தலைமைகள் ஒன்றிணைந்து, இன்று நிலவும் அரசியல் சூழலில் அரசியல் முடிவுகளை எடுக்கக் கூடாது.

Comments