ஒலுவில் கடலரிப்பை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தல்

🕔 May 27, 2015

Hakeem - 002லுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கு – துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து, அமைச்சர் ஹக்கீம் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயல் திட்டங்களுக்கு அமைவாக – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஹக்கீம், அங்கிருந்த அதிகாரிகளிடம், மேற்கண்ட விடயத்தினை வலியுறுத்தினார்.

இதேவேளை, ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பினால் பாரிய நிலப்பகுதி கடலுக்குள் காவு  கொள்ளப்பட்டு வருகின்றமையினைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், ஒலுவில் வெளிச்சவீடு அத்திவாரம் இடிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில், தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அண்மையில் தரிசு நிலமாகக் காணப்படும் காணியை, ஒலுவில் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் பொருட்டு, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில், சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

மேலும் – அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ளுமாறு – சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.

இக் கூட்டத்தில் – நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் உயரதிகாரிகளும் பங்குபற்றினர்.

இதன்போது, அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் வரை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பிரதான செயல்திட்டங்கள் குறித்து, வரைபடங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அண்மையில் தரிசு நிலமாகக் காணப்படும் காணியை, ஒலுவில் நகர அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதையிட்டு அமைச்சர் ஹக்கீம் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் மண் அரிப்பினால் பாரிய நிலப்பகுதி கடலினால் காவு கொள்ளப்படுவதாக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், அத்தகைய பாதிப்பை தடுத்து நிறுத்துவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, ஒலுவில் வெளிச்சவீடு அத்திவாரம் இடிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றமை பற்றிக் குறிப்பிட்டதோடு, அதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு நகரில் ஒல்லாந்தர் கோட்டை அமைந்துள்ள பிரதேசத்தை பாரம்பரிய மரபுரிமைப் பிரதேசமாக மையப்படுத்தி, தேவையான புனர் நிர்மாணங்களை மேற்கொண்டு எழிலூட்டுவதற்கான வழிவகைகளும் இதன்போது ஆராயப்பட்டன. காத்தான்குடி கடற்கரைப் பூங்கா, கல்லடிப் பாலத்தை அண்டிய பறவை சரணாலயத்தோடு கூடிய பூங்கா, காந்தி பூங்கா, ஏறாவூர் கடலேரி பூங்கா, ஏறாவூர் பஸ் தரிப்பிடம், ஏறாவூர் புன்னக்குடா வீதி, பழைய சந்தை மற்றும் செங்கலடி நவீன சந்தை அபிவிருத்தி பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, ஒரு மாத காலத்திற்கு முன்னர் – அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, அபிவிருத்தி செய்யக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு, உரிய வரைபடங்களை தயாரித்து, உத்தேச செலவு பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டு – அவை பற்றிய தெளிவான விளக்கங்களையும் தொடர்புபட்ட அதிகாரிகள் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ. சுரேஷ், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், பொது முகாமையானர் ஸ்ரீமதி சேனாதீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் கிஷான் கருணாரத்ன, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் சமந்த ஜயசுந்தர, செயல்திட்ட பணிப்பாளர் மஹிந்த வித்தானச்சி, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் எஸ். தாம்புகல, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.முபீன் மற்றும் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.Hakeem - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்