மாகாண சபைத் தேர்தலை தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடத்த முடியாது: பிரதி தேர்தல்கள் ஆணையாளர்

🕔 June 13, 2018

ற்போதுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட் காலம் நிறைவடைந்து எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடக்கு உட்பட மேலும் 03 மாகாண சபைகளின் ஆயுட்காலங்கள் நிறைவடையவுள்ளன.

இந்த நிலையில், புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், புதிய முறைப்படி மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், மாகாண சபைக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எல்லை நிர்ணயத்துக்கான கால நடைமுறைகள் தொடர்பிலான சில நிபந்தனைகள் சட்ட வரைவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட வரைவு தொடர்பில் நாடாளுமன்றமே கவனத்தில் கொள்ளாதிருப்பது கவலைக்குரியதாகும் என்றும் பெப்ரல் அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதன் பின்னரே தேர்தல் குறித்த நடைமுறை ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியும் என, பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் முகம்மட் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்