மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு
மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையினை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமையால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன.
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்;
“மூன்று மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றுக்கான எல்லை நிர்ணய அறிக்கைகள் இது வரையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவில்லை. குறித்த ஒருமாத காலப்பகுதிக்குள் எல்லை நிர்ணய அறிக்கை வெளியிடப்பட்டால் மாத்திரமே, குறிப்பிட்ட காலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும். ஆனால், எல்லைநிர்ணய அறிக்கை இது வரையில் வெளியிடப்படவில்லை. எனவே, மாகாணசபை தேர்தலை செப்டெம்பர் மாதத்தில் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஒரு மாத காலப்பகுதிக்குள் எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கென தனியான குழுவொன்றை பிரதமர் நியமிக்க முடியும். அந்த குழுவினூடாக எல்லை நிர்ணய நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியும். அவ்வாறான குழுவும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
மாகாண சபைதேர்தல் முறைமைதொடர்பில் பலவாறான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்போது எல்லை நிர்ணய அறிக்கையின் தாமதமும் தேர்தலை ஒத்திவைக்க கூடிய சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.
மேலும் சிவில் அமைப்பு என்ற ரீதியில் எல்லை நிரண்ய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கென பெப்ரல் அமைப்பு – குழுவொன்றினை நியமித்துள்ளது. இருந்தபோதும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையிலாவது மாகாண சபைகளுக்கான தேர்தலினை விரைவில் நடத்தவேண்டும்” என்றார்.
இது குறித்து கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறுகையில்;
“மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்காகவே எல்லை நிர்ணய அறிக்கையினை வெளியிடும் பணிகளும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளன. எல்லை நிர்ணய அறிக்கையை வெளியிடாமல் தேர்தலை நடத்த முடியாது.
குறித்த காலத்தில் தேர்தலை நடத்த வேணடுமானால் எல்லை நிர்ணய அறிக்கையும் விரைவில் வெளியிடப்படவேண்டும்” என்றார்.