சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

🕔 April 19, 2018

த்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

இலங்கையில் குடியுரிமையற்ற சிங்கப்பூர் நாட்டவரான அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் இலங்கையை விட்டு சென்றிருந்தார்.

இதேவேளை, மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு சமமான உருவம் கொண்ட நபர் ஒருவர் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று வரும் வரை காத்திருக்கும் போது, அங்கு வாழும் இலங்கை இளைஞர்கள் சிலரே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளதாக குறித்து ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அர்ஜுன் அலோசியஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச பொலிஸார் தேடி வருகின்றன.

ஏற்கனவே, இவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்