உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவது ஜனநாயக விரோத செயல் என்று, கபே எனப்படும் நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
இதனை அரசாங்கமும் உணர வேண்டும் என்றும், அவர் கூறினார்.
எல்லை நிர்ணய பணிகள் முழுவதும் நிறைவடைந்திருக்கின்ற நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக, அவர் மேலும் தெரிவிக்கையில்;
“உள்ளுராட்சி தேர்தல் – நாட்டின் சகல மாகாணங்களிலும் நடத்த வேண்டிய தேவையுள்ளது.
எல்லை நிர்ணயம் முழுவதுமாக நிறைவடைந்திருக்கின்ற இடங்களில் மாத்திரமாவது தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்த காலம் தாழ்த்துவதன் காரணம் என்னவென்று, நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் என்ற ரீதியில் நாம் உரிய காரணங்களை அரசாங்கத்திடம் கேட்டாலும், போலியான காரணங்களே முன்வைக்கப்படுகின்றன.இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் நாட்டில் தற்போதைய நிலையில் 33 கட்சிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. காலம் தாழ்த்தாமல் தேர்தல் நடத்தப்படுமாயின் அந்தக் கட்சிகளையும் பதிவு செய்ய முடியும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதன் அவசியம் குறித்தும், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதன் நிலைமைகள் குறித்தும் நாம் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் முதல் அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டி வருகின்றோம்.
ஆனால், அரசாங்கம் இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தை நேரடியாகவே குறித்து காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
இதன்படி, உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரி மற்றும் ரணில் இணைந்த தேசிய அரசாங்கம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அவ்வமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் காத்திரமான கருத்துக்களை இது தொடர்பில் முன்வைக்காமல் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை நல்லாட்சி அரசாங்கத்துக்கான அடையாளங்களாக இல்லை.
அது மட்டுமல்லாது, உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தி நடத்தப்படுவது பாரியதொரு குற்றமாக அமையும். அதேவேளை, மக்களின் உரிமைகளையும் நேரடியாக பறிக்கும் முயற்சியாகும்.
அரசாங்கத்தினால் இவ்வாறு காரணங்கள் கூறப்படுவது நேரடியாகவே ஜனநாயகத்தை மீறும் விதமாக அமைந்திருக்கின்றது. அதேவேளை, இது பாரியதொரு மக்கள் புரட்சிக்கும் வழிவகுத்து விடும். எனவே, நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக் கொண்டு பெயரளவில் மாத்திரம் செயற்படாமல் அதற்கான வழிவகைகளை மைத்திரி – ரணில் இணைந்த தேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.