மு.கா. செயலாளர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றால், தலைவருக்கும் அது பொருந்த வேண்டும்: ஹசன் அலி
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் மோகம் கொள்ளக்கூடாது என்றும் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவிப்பது தவறாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில் கட்சியின் தலைவரும் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் மோகம் கொள்ளக் கூடாது என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தன்னைப் பற்றி கூட்டங்களில் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடகமொன்றுறுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“கட்சியின் யாப்பில் செயலாளர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று குறிப்பிடவில்லை. அரசியலில் செயலாளர் ஈடுபடக்கூடாது, அமைச்சுப் பதவிக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ ஆசைப்படக்கூடாது என்றும் தெரிவிக்க முடியாது. அப்படிக் கூறுவதென்றால் அது கட்சியின் தலைவருக்கும், பொருளாளருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.
தேசியப் பட்டியல் மூலம் எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாகவும், பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாமெனவும் கட்சியின் தலைவரினால் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. உறுதி மொழியும் வழங்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியலில் எனது பெயர் 06 ஆவதாக இடம்பெற்றிருந்தது என்றாலும் எனக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படவில்லை.
தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த என்னைத் தடுத்து நிறுத்தி தேசியப்பட்டியலில் உள்வாங்குவதாகக் கூறியதை திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன். இப்போது நான் கட்சியின் தலைவருக்கு எதிராக சதி செய்ததாக கூறப்படுவதெல்லாம் சோடிக்கப்படும் கதைகளாகும்.
கட்சியின் எதிர்கால நகர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் “என்றார்.