முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர்; கண்ணீர் விட்டு, பலரும் அழுகை
🕔 March 25, 2016
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம், கிறித்தவ மற்றும் இந்து அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர் பிரான்ஸிஸ், “நாம் அனைவரும் ஒரே இறைவனின் குழந்தைகள்” என்றார்.
பிரஸெல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதையடுத்து பாப்பரசரின் இந்த சகோதரத்துவ செய்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரோமுக்கு வெளியே புகலிடம் நாடி வந்தவர்களிடத்தில் நேற்று வியாழக்கிழமை பேசிய பாப்பரசர், பிரஸெல்ஸ் தாக்குதல் போருக்கான ஒரு சமிக்ஞை அல்ல என்று மறுத்தார்.
பிரஸெல்ஸ் தாக்குதல் ‘அழிவின் செய்கை’ என்பதற்கு மாற்றாக, புலம்பெயர்ந்தோர் கால்களைக் கழுவியதன் மூலம் சகோதரத்துவத்தை உணர்த்தும் செயலாகக் கருதப்படுகிறது.
அவர்களின் கால்களைக் கழுவுவதற்கு பாப்பரசர் மண்டியிட்டபோது அகதிகளில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். புனித நீரால் அவர்களது கால்களைக் கழுவி சுத்தம் செய்த பாப்பரசர், அவர்களுடைய கால்களை முத்தமிட்டார். இந்த நிகழ்ச்சியில் 04 பெண்களும் 08 ஆண்களும் கலந்து கொண்டனர். ஆண்களில் நைஜீரியாவிலிருந்து 04 கத்தோலிக்கர்களும், மாலி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 03 முஸ்லிம்களும் இந்தியாவிலிருந்து சென்ற ஒரு இந்துவும் அடங்குவர்.
பொதுவாக கால்களைக் கழுவும் புனிதச் சடங்கில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வர். பாதிரியார்கள் பலர் மரபு ரீதியாக 12 கத்தோலிக்க ஆண்களுக்கே இந்த சடங்கை நிகழ்த்துவர்.
ஆனால் பாப்பரசர், தான் பதவியேற்ற 2013 ஆம் ஆண்டில், சில வாரங்களிலேயே கத்தோலிக்கர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, சிறார் முகாமுக்குச் சென்று அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதே புனிதச் சடங்கை செய்தார்.
தற்போது முஸ்லிம் அகதிகள், பெண்கள், இந்துக்கள் என்று பாப்பரசரின் சடங்கு புதிய பரிமாணம் பெற்றுள்ளது.
‘நாம் வேறுபட்ட பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆனால் நாம் சகோதரர்கள், நாம் அமைதியாக வாழ வேண்டும்’ என்று இதன்போது பாப்பரசர் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)