லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படவுள்ளார்.
ராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் முக்கியஸ்தர் மற்றும் முன்னாள் உறுப்பினர் ஆகியோரிடமும், மேற்படி கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, புலனாய்வு உத்தியோகத்தர்கள் சிலருடைய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே, லசந்தவின் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி புலனாய்வு உத்தியோகத்தர்கள் தற்போது சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூன்று நபர்களிடம் மிக விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை நடத்தவுள்ளனர். இதன் மூலம், லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்வதற்கு உத்தரவு வழங்கிய நபரைக் கைது செய்ய முடியும் என, புலனாய்வுத் துறையினர் நம்புகின்றனர்.