
செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி பாடசாலை மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிய – பாடசாலை மாணவர்கள் இருவரை ஜூன் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹொரண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மாணவிகளின் முகங்களைப் பயன்படுத்தி இந்த AI வீடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்கி – பாடசாலையின் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதத் தயாராகும் நான்கு மாணவிகளின் படங்களே இவ்வாறு ஆபாசமாக வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஹொரண நீதவான் சந்தன கலன்சூரிய – இருவரையும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் உள்ள சிறுவர் மறுவாழ்வு மையத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஒரு மாணவியின் தந்தை அந்த ஆபாச படத்தைப் பார்த்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டமையை அடுத்து, மேற்படி மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.



