முஸ்லிம் பெண் எரித்துக் கொலை; திகன பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
மூன்று பிள்ளைகளின் தாயான முஸ்லிம் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை காலை எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர் திகன, கும்புக்கந்துற பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாத்திமா சியாறா என்பவராவார். இவரின் கணவர் வெளிநாடொன்றில் பணியாற்றி வருகின்றார்.
அதே பிரதேசத்தைச் சேந்தவர் ஒருவரே – மேற்படி பெண்ணை எரித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர், சம்மந்தப்பட்ட பெண்மீது பெற்ரோல் ஊற்றிய பின்னர் தீ வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் நபர், பிரதேசத்தை விட்டும் தப்பிச் சென்றுள்ளார்.
முஹம்மட் றிபாஸ் எனப்படும் மேற்படி நபர், பல்வேறு குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானவராவார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பெண் – சந்தேக நபரின் வீட்டில் சில காலம் வாடகை அடிப்படையில் வசித்து வந்ததாகத் தெரியவருகிறது.
ஆயினும், சில முரண்பாடுகள் காரணமாக வாடகை வீட்டிலிருந்து குறித்த பெண் வெளியேறியதோடு, சந்தேக நபருக்கு எதிராக பொலிஸில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, இக் கொலைச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.