மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல்
ஈஸ்டர் தின தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு – எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று (23) கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை உடனடியாக பொலிஸார் விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
“ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய முழு உலகமும் காத்திருக்கிறது. எனவே, அனைத்து விவரங்களையும் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத் தலைவர்களுடன் ஏற்கனவே பேசி விட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி