58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன், விமான நிலையத்தினுள் பெண் கைது

🕔 February 10, 2024

ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் – தனியார் துப்புரவு நிறுவனமொன்று சார்பில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முற்பட்ட 58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (பிப்ரவரி 10) காலை இலங்கை சுங்க திணைக்களத்தின் – போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்தக் கடத்தலை முறியடித்தனர்.

தங்க நகைகள் மற்றும் ஜெல் வடிவிலான தங்கம் ஆகியவற்றை இவர் கடத்த முற்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் வெயங்கொட – மிரிடியலந்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.

விமான நிலையத்திலுள்ள சுங்கவரியற்ற வர்த்தக நிலையத்தின் கழிவறை ஒன்றில் அடையாளம் தெரியாத பெண்ணொருவர் தங்கம் அடங்கிய பொதியை தன்னிடம் கொடுத்ததாக சந்தேகத்திற்குரிய பெண் – சுங்க அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விமான நிலைய வளாகத்திற்கு வெளியே ஒரு நபரிடம் பார்சலை ஒப்படைத்த பிறகு தனக்கு 60,000 ரூபாய் பணம் வழங்குவதாகவும் அந்தப் பெண் உறுதியளித்ததாகவும் கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

1.4 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 1.35 கிலோ கிராம் தங்க ஜெல் ஆகியவை இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களத்தின் – போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்