உயர் மட்டத்தினருக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு
இலங்கையின் உயர்மட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலகுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானம் எடுத்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களிடம் பேசிய அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே; மேற்படி நபர்களுடன் பயணிக்கும் வாகன பேரணிகளுடன் வரும் அம்பியுலன்ஸ்களில் வைத்தியசர்கள் பயணிக்க மாட்டார்கள் என்று அறிவித்தார்.
அதி முக்கிய நபர்களுக்கான வாகன பேரணியுடன் பயணிப்பவர்களில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.
பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காக அரசியல்வாதிகளால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார ‘கிளினிக்’களில் வைத்தியர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனவும் டொக்டர் ஹரித அலுத்கே குறிப்பிட்டடார்.
நொவம்பர் 01ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த சிறப்பு வைத்திய சேவைகளில் இருந்து வைத்தியர்கள் விலகவுள்ளனர்.
அரச சுகாதார அமைப்பைப் பாதுகாக்க பலமுறை முறையிட்டும் அரசு பதிலளிக்கத் தவறியதால், அரச வைத்திய அதிகாரிகள் சங்க மத்திய குழுவால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.