அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர்
அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரத்தில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முன்னர் 16 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்குதல்தாரியான ரொபர்ட் கார்ட் “ஆயுததாரியாகவும், ஆபத்தானவராகவும் கருதப்பட வேண்டும்,” என்று லூயிஸ்டன் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, பொதுமக்கள் அவரை அணுகவோ அல்லது தொடர்பு கொள்ளவோ கூடாது என்றும் வலியுறுத்தினர்.
மேலும் ரொபர்ட் கார்ட் – சான்றளிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவ ஒதுக்குப் படை (US Army Reserves) உறுப்பினர் எனவும், சட்ட அமுலாக்கத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் அமெரிக்க ராணுவ ஒதுக்குப் பயிற்சி மையத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராகப் பயிற்றுவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மனநலப் பிரச்சனைளைக் கொண்டிருந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் அண்மையில் இரண்டு வாரங்கள் மனநல சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில்குறித்த பகுதியிலுள்ள மக்களை வெளியில் வராமல் வீட்டினுள் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற லூயிஸ்டன் மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் சுமார் 65 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.