அரச வைத்தியசாலைகளுக்கு வெளிநாட்டு வைத்தியர்களைக் கொண்டுவரும் எண்ணம் கிடையாது: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
“இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை வரவழைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தப் பதிலை வழங்கினார்.
இலங்கையில் மருத்துவ பீடங்களை அதிகரிப்பது அல்லது தனியார் மருத்துவ பீடங்கள் இயங்க அனுமதிப்பது என இரண்டு தெரிவுகள் மட்டுமே மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வெளிநாடுகளில் தகுதி பெற்ற சுமார் 3,000 மருத்துவ மாணவர்கள் இலங்கையில் பிரிவு 16 பரீட்சைக்கு (Act 16 examination – இது மருத்துவம் செய்வதற்கான பதிவை மேற்கொள்வதற்குரிய பரீட்சை) தோற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் 1,000 மருத்துவ பீடங்களில் இருந்து தகுதி பெற்ற மாணவர்களையாவது அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.