ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல்

🕔 September 12, 2023

– பாறுக் ஷிஹான் –

சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சாட்சியமளித்த ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து  மோசடியான முறையில் தன்னை  திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்ணொருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (12) விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இதன்போது நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்தி வைத்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரே தனது சகோதரர்  சகிதம் – சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில், ஆஸாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, முதல் திருமணத்தை மறைத்து – தன்னை மறுமணம் செய்துள்ளதாகவும், பின்னர்   மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று  பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து   குடும்பம் நடாத்தினார் எனவும், பின்னர் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி இருப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

சேனல் 4 ஆவணப்படம் வெளியிடப்பட்ட பின்னர், ஆசாத் மௌலானாவுக்கு எதிராக இவர் இந்த முறைப்பாட்டை செய்துளார்.

2019.09.29 திகதி அன்று குறித்த திருமணம் அம்பாறை மாவட்டம் இறக்காமம் எனும் பகுதியில்  நடைபெற்றதாவும், வரவேற்பு உபசாரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றதாகவும் முறைப்பாட்டில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். ஆனாலும் தற்போது இறக்காமம் பள்ளிவாசலின் ஆவணம் போலியாக தயார் செய்யப்பட்டு குறித்த திருமணம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆஸாத் மௌலானா தனது முதலாவது திருமணத்தை மறைத்து குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்