மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு
– பாறுக் ஷிஹான் –
அரச பாாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் மாத விடாய் தொடர்பில், மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபர், அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரியதாக, கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய குறித்த மாணவ தலைவியை பாடசாலை அதிபர் தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும், எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்றது எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது? என்பதை பதியுமாறும், மாதவிடாய் காரணமாகத்தான் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்க வில்லை? போன்ற தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் உத்தரவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் உள்ள சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.