ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம்
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 வயதுடைய நபர் ஒருவர் தெஹிவளை – ஆபர்ன் பிளேஸில் நேற்று (19) இரவு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர், ஆபர்ன் பிளேஸை சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில், வேலை முடிந்து வீடு திரும்பிய மேற்படி நபர், தனது குடியிருப்புக்கு முன்னால் உள்ள வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு வேறு ஒருவரை இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் தற்செயலாக – இந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.