கம்பளை யுவதி முனவ்வரா கொலை: சந்தேக நபர் கூறிய இடத்தில் சடலம் மீட்கப்பட்டது
கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி பாத்திமா முனவ்வராவினுடையது என கூறப்படும் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
என்ன நடந்தது?
கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரின் சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கை இன்று எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் அடையாளம் காட்டிய இடத்தில் கம்பளை நீதவான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக,தெரிவிக்கப்பட்டிருந்தது.
கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியொருவர் கடந்த 07ஆம் திகதி காணாமல் போனார்.
இந்த நிலையில் அந்த யுவதி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் கைதான 24 வயது சந்தேகநபர் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை வழங்கினார்.
அந்த வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.