பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை

🕔 February 1, 2023

லங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், நான்காவது முறையாக இன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

அதன்போது உரையாற்றிய, பிரித்தானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவின் கூட்டத்தில், நாட்டின் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழுவினால் மீளாய்வு செய்யப்படும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஆய்வுகளும் 2008, 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டன.

அரசாங்கம் வழங்கிய அறிக்கைகள், மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகள், மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புகள், தேசிய மனித உரிமை நிறுவனங்கள், பிராந்திய நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்