சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு
![](https://puthithu.com/wp-content/uploads/2022/05/Ranil-9545.jpg)
இலங்கையில் யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (06) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு நிகரான சட்டமொன்றை இவ்வாறு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் பத்திரிகை மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் உள்ளதாகவும், ஆனால் சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் அதில் இல்லை எனவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் நகல் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், இலங்கைக்கு ஏற்ற சட்டங்கள் அடங்கிய சட்டமூலத்தை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு ஊடகத் தளங்களின் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.