முதலை இழுத்துச் சென்ற இளைஞரின் உடல் மீட்பு
– பாறுக் ஷிஹான் –
கிட்டங்கி ஆற்றில் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி – கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி பாலம் அமைந்துள்ள பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இளைஞர் ஒருவர் – முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டார்.
மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய, குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றும் பொருட்டு, வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது.
இவ்வாறு முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டவர் சேனைக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது 30) என்பவராவார்.
பொதுமக்களுடன் கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி பகுதியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்ற போதிலும், அது குறித்து எச்சரிக்கை பதாதைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.