ஹெரோயினுடன் நபர் கைது; இரண்டு வாகனங்களும் சிக்கின: கல்முனை வீடுகளில் தேடுதல்
– பாறுக் ஷிஹான் –
ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்று நள்ளிரவு (22)கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதப்போது 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன், வேன், கார் என இரு வாகனங்களை கைப்பற்றிய படையினர், 36 வயது சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.
பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பொருட்களையும், சந்தேக நபரையும் ஒப்படைத்தனர்.
இதே வேளை இந்த நடவடிக்கையின் போது தப்பி சென்ற சந்தேக நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் என இனங்காணப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் கல்முனை பகுதியில் சோதனை இடப்பட்டுள்ளன.
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியில் இன்று (23) காலை கார் ஒன்றிலிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.