பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனியார் துறையினர் தொழில் வழங்கப் பயப்படுகின்றனர்: அமைச்சர் பிரசன்ன நாடாளுமன்றில் தெரிவிப்பு

– முனீரா அபூபக்கர்-
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவருடைய மகனைத் தாக்கிய சம்பவத்தில், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று ஆளும்கட்சியின் தலைமை அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (13) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறுகையில்;
“பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்ததை கட்சி வேறுபாடின்றி கண்டிக்கிறோம். இது தொடர்பாக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கெளரவ சபாநாயகர் அவர்களே, இதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் இளைஞர்களைக் கைது செய்வது ஜனநாயக விரோதம் என்று கூறுவார்கள்.
மே 9 இச்சம்பவம் குறித்து கூறும்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் டொக்டர்கள், பேராசிரியர்களின் நடத்தை பற்றி நான் முன்பு பேசினேன். அந்த பேச்சு முடிந்ததும் ஃபேஸ்புக்கில் கண்டனத்திற்குள்ளானேன். நான் மனசாட்சியுள்ள ஒரு பேச்சாளன். வீடுகளுக்கு தீ வைக்க இளைஞர்களைத் தூண்ட அரசியல் பின்னணி கொண்ட ஒரு குறிப்பிட்ட குழு இருந்தது. எல்லோரும் இல்லை. ஒரு குறிப்பிட்ட குழு சில காலமாக குடும்ப வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட ஏற்பாடு செய்துள்ளது. இல்லை என்று சொல்ல முடியாது.
வீடுகளைத் தீ வைக்க பேராசிரியர்களும் சென்றார்கள். இது படிப்படியான நடந்த ஒரு மாற்றம். இன்று தங்களது கருத்தோடு உடன்படாத வைத்தியர்கள் மற்றும் பேராசிரியர்களை இடைஞ்சல் கொடுக்கும் நிலைமை வந்தடைந்துள்ளது.
மாணவர் வன்முறையால் – இந்த நாட்டில் இளைஞர்கள் பலகைலைக்கழகத்துக்குச் செல்ல பயப்படுகின்றனர். இன்று தனியார் துறையினர் பல்கலைக்கழக மாணவர்களை வேலையில் சேர்க்க பயப்படுகிறார்கள். அதனால் தனியார் துறையை சார்ந்தவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்ற மாணவர்களையே தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு புதிய நிகழ்வு.
மேலும் குழுவின் ஆய்வு அறிக்கையை கொடுங்கள் என்று முஸம்மில் எம். பி கூறினார் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கூறியுள்ளோம். இதை இந்த நாட்டில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் பின்னணியில் இருப்பது யார்? சில அரசியல் கட்சிகள் ‘ஐஸ்’ போதைப்பொருள் போல – இதுபோன்ற விஷயங்கள் மூலம் மாணவர்களின் மனதை சிதைத்துவிட்டன.
சில ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவர்களை ‘அடி’ என்றும் ‘கொல்’ என்று ஏவுகிறார்கள். இது இப்படியே போனால் பல்கலைக்கழக கட்டமைப்பு சீர்குலைந்துவிடும்” என்றார்.