ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கத் தயார்: பொதுஜன பெரமுன செயலாளர் தெரிவிப்பு

🕔 December 12, 2022

க்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு கொள்கைகளுக்கும் பாதிப்பின்றி, நாட்டின் நலனுக்காக கூட்டணியை ஏற்படுத்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த தீர்மானத்திற்கு முன்னர், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற அடிப்படையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான முழுமையான ஆதரவை நாடாளுமன்றில் வழங்கியிருந்தோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவிலேயே அவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதற்கமைய இரு கட்சிகளுக்கும் இடையில் தொடர்பொன்று உள்ளது.

இரு கட்சிகளினதும் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட முடியும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் கலந்துரையாடி, இரு தரப்பும் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற முடியுமாயின் நிச்சியமாக அதனை முன்னெடுக்க முடியும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்