சீனா, இலங்கைக்கு அல்ல, ராஜபக்ஷகளுக்கே நண்பன்: நாடாளுமன்றில் போட்டுத்தாக்கிய சாணக்கியன்
மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல என்றும், அந்த நாடு – ராஜபக்ஷக்களின் நண்பன் எனவும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (30) வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைகக் கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்; “2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் துறை அமைச்சுக்கு 10.7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தின் முகெலும்பாக இருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதாவது நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டுக்கு அந்நிய செலாவணியை காலம் காலமாக ஈட்டித் தரும் பெருந்தோட்ட மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
வர்த்தகத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டு 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வருடம் 5.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏதேனும் புதிய அபிவித்தி திட்டங்களை ஆரம்பிக்க அவதானம் செலுத்துங்கள். வாழைச்சேனை கடதாசி உற்பத்தி நிலையம், பரந்தன் கனியமணல் அகழ்வு தொழிற்துறை காணப்படுகின்றன.
இருக்கும் வளங்களை எவ்வாறு சூறையாடலாம் என பொறுப்பு வாய்ந்த தரப்பினர் அவதானம் செலுத்துகின்றார்களே தவிர, வளங்களை கொண்டு எவ்வாறு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது என்பது குறித்து அவதானம் செலுத்துவதில்லை.
மட்டக்களப்பு மற்றும் திருக்கோவில் பகுதியில் உள்ள இல்மனைட் வளம் சூறையாடப்படுவதை தொடர்ந்து எதிர்ப்போம்.
ஆகவே இந்த பகுதியில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தினால் அதனை முழுமையாக வரவேற்போம்.
அரச நிதியை மோசடி செய்து நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளவர்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மோசடி செய்யப்பட்டவற்றை அரசுடமையாக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும்,கொழும்பு துறைமுக நகரத்தையும் சீனா தனதாக்கியுள்ளது.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது? சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலமும் கிடைக்கப் பெறவில்லை.
சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் கடன் மறு சீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாக செயற்பட வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, இலங்கைக்கு ஆதரவாக சீனா செயற்படுகிறது என குறிப்பிடுகிறார்கள். இதை பைத்தியகாரத்தனமான பேச்சு என்றே சொல்ல வேண்டியுள்ளது.
சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மத சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையினையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள்? சீனா – இலங்கையின் நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவினதும், அவரின் குடும்பத்தினரது நண்பராகவே சீனா உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.