இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்தல்: ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி சொன்னது என்ன?

🕔 October 18, 2022

ரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என 20ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையை, 22ஆவது சட்டமூலத்தில் மாற்றுவதற்கான முன்மொழிவுகள் இடம்பெறாமை தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிகாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (17) இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர்கள் இதனை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான காலம் இரண்டரை வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் நாடாாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஆகக்குறைந்த காலம் நான்கரை வருடங்களாக குறிப்பிடப்பட்டிருந்ததை இதன்போது சுட்டிக்காட்டிய நடாளுமன்ற உறுப்பினர்கள், 22 ஆம் திருத்தச் சட்ட மூலத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான காலத்தை மாற்றுவற்கு எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமை குறித்தும் வினவியுள்ளனர்.

இதன்போது பதிலளித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் அதனை தான்தான் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான எந்தவித தயார் நிலையும் தற்போதைய நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் நேற்றைய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 22 ஆம் திருத்தச்சட்டமூலத்தை கொண்டு வர வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சஃப்ரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்