கல்முனை பிராந்தியத்தில் பிரதான போதைப்பொருள் முகவராக செயற்பட்டு வந்தவருக்கு விளக்க மறியல்
![](https://puthithu.com/wp-content/uploads/2019/07/Kalmunai-MC-011.jpg)
– பாறுக் ஷிஹான் –
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கல்முனை மதிரஸா வீதியில் வைத்து கைதான சந்தேக நபர் தொடர்பிலான வழக்கு நேற்று (10) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (7) அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மதிரஸா வீதியில் வைத்து சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
இவ்வாறு கைதான நபர் கல்முனைகுடி பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்கவராவார்.
இவர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 7. 87 கிராம் உட்பட, சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவத்தில் தொடர்பு பட்ட சந்தேக நபர், இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் பிரதான முகவராக செயற்பட்டு வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.