போதைப் பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமையினைக் கண்டித்து ஆலையடிவேம்பில் ஆர்ப்பாட்டம்

🕔 October 4, 2022

– பாறுக் ஷிஹான் –

போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்படாமையைக் கண்டித்து, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நேற்று திங்கட்கிழமை(3)  நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டங்களில் போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்களை ஏந்திய சுலோக அட்டைகளை தாங்கி நின்றனர்.

அத்தோடு கோசங்களை எழுப்பியவாறும் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

கடந்த சில காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் – மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளில் போதைப்பொருளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிநபர் ஒருவர் பாடசாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, 15 ஆசிரியர்கள் இணைந்து கையொப்பமிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றினை வழங்கியிருந்தனர்.

ஆனாலும் அவ்விடயம் தொடர்பில் உரிய நபர் கைது செய்யப்படவில்லை என்றும், உரிய நபரை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு அழுத்தங்கள் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை அடிப்படையாக வைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆசிரியர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதனால் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், மாணவர்களும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவற்றினை அடிப்படையாக வைத்தே ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடாசாலைகளிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அவ்விடத்துக்குச் சென்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. பபாகரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் கீ. கமல மோகனதாசன் ஆகியோரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

இங்கு போதைப்பொருளுக்கு எதிரான வீதி நாடகமொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஆசிரியர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்மந்தப்பட்ட நபர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்