பிரதமர் வீடு – தீ வைக்கப்பட்டமை தொடர்பில் மூவருக்கு விளக்க மறியல்

🕔 July 10, 2022

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 பேரையும் ஜூலை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் நேற்று (09) மாலை 06 மணிக்குப் பின்னர் திட்டமிடப்பட்ட வகையில் மின்வெட்டு எதுவும் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் 03 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும், கடவத்த மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றிரவு (09) பிரதமரின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பிரவேசித்ததை அடுத்து, வீடு தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்