மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

🕔 January 31, 2022

ந்தியாவில் இருந்து மஞ்சள் டின்களில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர், கிட்டத்டதட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதிவாதிக்கு எதிரான குற்றத்தை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு வாதி தவறியதாக குறிப்பிட்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி. ரத்நாயக்க, பிரதிவாதியை விடுவித்ததாக ‘திவயின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பெண் வத்தளை, மாபோல பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவராவார். 2003 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து 234 கிராம் ஹெராயின் இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குறித்த பெண்ணின் கணவருக்கு ஹெரோயின் தொடர்பான குற்றச்சாட்டில் இந்தியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள தனது கணவரை சிறையில் பார்த்துவிட்டு திரும்பி வரும் வழியில், இந்த ஹெரோயின் நிரப்பப்பட்ட மஞ்சள் டின்களை கொண்டு வந்துள்ளார் என, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த டின்களில் ஹெரோயின் இருப்பது தனக்குத் தெரியாது என்றும், இது இலங்கையில் உள்ள உறவினர் ஒருவரிடம் ஒப்படைக்க யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்டது என்றும் பிரதிவாதி கூறியிருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, அவர் மீதான வழக்கை நிரூபிக்க சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், இந்த மாதம் 26ஆம் திகதி அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்