பொதுஜன பெரமுன வசமுள்ள நகர சபை ‘பட்ஜட்’ தோல்வி

🕔 December 7, 2021

– க. கிஷாந்தன் –

லவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (07) தோல்வியடைந்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையால் வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.

அந்த நகர சபையின் தலைவர் லச்சுமன் பாரதிதாசன், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று சபையில் சமர்பித்தார்.

இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்தன குணதிலக மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோர் வாக்களித்தனர்.

இதனால் வரவு செலவுத் திட்டம் 5 க்கு 4 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

தலவாக்கலை – லிந்துலை நகர சபையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும், சுயேட்சை குழுக்கள் சார்பில் இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் உள்ளனர்.

இவர்களில் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை குழு உறுப்பினர் இன்று (07) சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

அதேபோல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினவை பிரதிநிதித்துவப்படுத்திய மயில்வாகனம் பரமானந்தன், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனக்கு பதிலாக அசங்க சம்பத் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மயில்வாகனம் பரமானந்தன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தை நாடி – இடைகால தடை உத்தரவை நேற்று பெற்றுக்கொண்டார். இந்த தடை உத்தரவு குறித்த அறிவிப்பு நீதிமன்றத்தால் சபைக்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் உறுப்பினராகும் சந்தர்ப்பத்தை அசங்க சம்பத் பீரிசுக்கு நகர சபை தலைவர் வழங்கவில்லை.

இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், அசங்க சம்பத் பீரிஸ் பொலிஸாரால் சபையில் இருந்து அகற்றப்பட்டார்.

இவ்வாறு தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்ததால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்