‘பட்ஜட்’டில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் தீமைகள்; கைத்தொழில் வர்த்தக சம்மேளம் சுட்டிக்காட்டியுள்ளது
– அஷ்ரப் ஏ.சமத் –
வீதியில் ஒரு விபத்து நிகழும்போது, அந்த இடத்திலேயே 10ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடும் முறைபற்றி 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதை நடைமுறைப்படுத்துவது நீதிமன்றமா அல்லது பொலிஸாரா என்பது பற்றி இது வரை தெளிவுபடுத்தப்படவில்லை என்று, இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளனம் நேற்று புதன்கிழமை வெள்ளவத்தை சபயா ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியது.
சம்மேளனத்தின் தலைவர் தலைவர் அஜித் வதுகேவம மற்றும் செயலாளர் அஜித் பெரேரா உள்ளிட்டோர் மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போது, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
அவை பின்வருமாறு;
– சிறிய நிதி நிறுவனங்களின் வருமான வரி நூற்றுக்கு 06 வீதமான இருந்தது. தற்பொழுது சிறிய நிதி நிறுவனங்களின் வற் வரி 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
– நாட்டில் கைத்தொலைபேசி துறையில் ஈடுபடும் வர்த்தகர்கள், தமது தொழிலை மீள பதிவுசெய்யுமாறு வரவு – செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால், இத்துறையில் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
– வெளிநாட்டு முதலீட்டார்கள் இலங்கையில் காணி, கட்டிடங்களை சொந்தமாக வாங்கி நிரந்தரமாக முதலிடுவதற்கு சர்ந்தர்ப்பம் வழங்கப்படுதல் வேண்டும்.
– நான்கு சக்கர வாகனங்களின் புகைப் பரிசோதனைக்கான கட்டணத்தினை 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சாதாரண வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
– இலங்கையில் ஹைபிரிட் மற்றும் மின்சார கார் விற்பனை அறிமுகத்தால் சாதாரண வீடுகளில் தமது கார்களின் மின் கலங்களுக்கான மின்சாரத்தினை மீள்நிரப்பும் போது, பாரிய மின் பாவனை ஏற்படும்.
– கம்பனிகளைப் பதிவு செய்வதற்கான தொகை 05 ஆயிரமாக இருந்ததை, ஒரேயடியாய் 60ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளமையினால், புதிதாக கம்பனிகளை பதிவு செய்பவருக்கு இத் தொகையினை சமாளிக்கமுடியாமல் போகும்.
– உல்லாச ஹோட்டல்கள் அனைத்தினையும், உல்லாச அபிவிருத்திச் சபையில் பதிவுசெய்யும் முறைமையானது, மேலும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
– அரசாங்கத்தில் கல்வி,சுகாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் உயர் பதவி வகிப்போருக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தினை நிறுத்தியமையானது ஏற்றுக் கொள்ள முடியாதது.
– ஒவ்வொரு மாகாணங்களுக்குமான அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மத்திய மாகணத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
– மாணிக்கக்கற்கள் நகைகளின் விலைகளுக்கான விலை நிர்ணயம் பற்றி வரவு – செலவுத் திட்டத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை. இலங்கையில் இவ்வாறான நகைகளின் விலை கூடுதலாக இருப்பின், உல்லாசப் பயணிகள், நகை விலை குறைவாக உள்ள நாடுகளிலேயே அவற்றினைக் கொள்முதல் செய்வார்கள்.
– சிறு தேயிலைத் தொழிலாளர்கள் 38 ஆயிரம் பேர், தொழில் பாதிப்புள்ளாகின்றனர். அவர்களுக்காக அரசாங்கம் உர மாணியம் மற்றும் வேறு எவ்வித நன்மைகளையும் வரவு – செலவு திட்டத்தில் உட்படுத்தவில்லை.
எனவே, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினை தாம் ஆதரிக்கவோ பகிஷ்கரிக்கவோ போவதில்லை என இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளம் தெரிவித்துள்ளது.