சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: அமைச்சரவை அனுமதி

🕔 July 20, 2021

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்த கொள்கலனின் விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்படுவதற்கும் அமைச்சரவை நேற்று தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த 18 லீற்றர் எரிவாயு கொண்ட கொள்கலனின் அடைக்கப்பட்டுள்ள எரிவாயுவின் நிறையும் எதிர்காலத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு அடங்கிய கொள்கலனின் தற்போதைய உயர்ந்த பட்ச விலை 1,493 ரூபாவாகும்.

எவ்வாறாயினும் 18 லீற்றர் அளவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிவாயு கொள்கலன் தொடர்பாகக் கடந்த காலங்களில் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

குறிப்பாக இந்த கொள்கலன் ஊடாக நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, வர்த்தக அமைச்சரினால் நேற்று அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதன்படி இதற்கு முன்னர் 1,395 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 18 லீற்றர் சமையல் எரிவாயு கொள்கலனை, 1,150 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்