மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்
“பிரித்தானியர்கள் உடல் வரி அறவிட்டது போல இந்த அரசாங்கம் 15 வீதம் ‘மாதவிடாய் வரி’ அறவிட்டு, பெண்களின் மாதவிடாயிலும் வருமானம் தேட முயற்சிக்கிறது” என, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினர்.
“1848ம் ஆண்டு இங்கிலாந்தில் டொரிங்டன் ஆளுநர் உடல் வரி, நாய் வரி உள்ளிட்ட 07 வரிகளை அறவிட்டார். அதுபோல பெண்களின் ‘மாதாந்த மாதவிடாய்க்கு’ வரி அறவிடும் அரசாங்கமாக, இந்த அரசாங்கம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் பெண்களுக்கான சுகாதார பாதுகாப்பு அங்கிகளை இலவசமாக வழங்குகிறது. ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கம் இதற்கான வரியை 40% குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் ஒவ்வொரு வீட்டில் உள்ள தாய்மார், பெண்கள் மாதவிடாய்க்கான பேட்ஸ் பயன்படுத்துகின்றனர். அவர்களின் மாதாந்த கொள்வனவு பொருட்களில் பேட்ஸ் உள்ளது. எனவே அரசாங்கம் இதற்கான வரியை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.