அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம்

🕔 October 15, 2020

காதிபத்தியத்தை நோக்கி அபாயகரமான சூழலுக்குள் இந்த நாடு தள்ளப்படுவதையே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெளிக்காட்டுகின்றன என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என ஜனாதிபதி தனது நாடாளுமன்ற அக்கிராசன உரையில் கூறிய வாசகம் பற்றி இதுவரையில் தெளிவான விளக்கம் வழங்கப்படாத நிலையில், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் கைது முயற்சிகளை பார்க்கின்றபோது, ஒரே நாடு ஒரே சட்டம் என்பது, இலங்கை நாட்டில் இனவாதிகளை திருப்தி படுத்துவதற்கான ஒரே சட்டம் என புரிந்து கொள்ள முடிகின்றது எனவும் முஷாரப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு ஆட்சியாளர்கள் எடுத்து வரும் முயற்சிகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே, மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மக்கள் சமூகமொன்றின் தலைவர் அல்லது பிரதிநிதி என்ற வகையில் மன்னாரிலிருந்து புத்தளத்துக்கு அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு அவர்களின் அடிப்படை வாக்குரிமையை பதிவு செய்ய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை பெரும் குற்றம் என சித்தரித்து அரசியல் செய்யும் அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்.

இனவாதத்தை மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த இந்த அரசாங்கம், சரிந்து போகும் தம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தொடர்ச்சியாக தக்க வைக்க இப்படியான கைங்கரியத்தை கட்டவிழ்த்துள்ளனர்.

பெரும் பெரும் சர்ச்சைக்குரிய கொலைக்குற்ற வழக்குகளை எதிர்கொண்டு, பின்னர் அதிகாரம் கிடைத்தவுடன் அவற்றை மூடிமறைத்து இப்போது சொகுசாக வாழும் ஆட்சியாளர்கள், நேர்மையான மக்கள் தலைவர் றிசாட் பதியுதீனை அற்ப காரணங்களை காட்டி கைது செய்ய முயல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

முன்னர் அரசாங்கத்தின் நிர்வாக போக்குகள் உள்ளிட்ட விவகாரங்களில் சற்றளவு திருப்தியோடு நாம் இருந்தோம். ஆனால் அரசாங்கத்தின் தற்கால தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரல்களை பார்க்க்கிற போது மிகுந்த ஏமாற்றம் ஏற்படுகிறது.

நீதிக்கு புறம்பாக வெறும் அரசியல் பழிவாங்கல்களுக்காக எம் தலைவர் றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் முயற்சிகளை உடனடியாக இந்த அரசாங்கம் கைவிடுவதன் மூலம், சிறுபான்மை மக்கள் சமூகத்தை இந்த அரசாங்கம் அரவணைத்து செல்லும் என்கிற நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்படும்.

இல்லாத பட்சத்தில் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை இந்நாட்டிலிருந்து துருவப்படுத்தும் இத்தகைய செயற்பாடுகளால் இந்நாடு மீண்டும் அதாள பாதாளத்திற்கு செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்