தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக்குழு பிரதமரால் நியமனம்; 09 தேரர்களும் உள்ளடக்கம்
நாடு முழுவதும் பரவிக் காணப்படும் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதில் உதவிகளை வழங்குவதற்கான தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நியமித்தார்.
புத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் எனும் வகையில் அவர் இந்தக் குழுவை நியதித்துள்ளார் என, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
20 பேரைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்குரிய நியமனக் கடிதங்களை, பிரதமர் இன்று அலறி மாளிகையில் வைத்து வழங்கினார்.
மேற்படி 20 உறுப்பினர்களில் 09 பேர் பௌத்த தேரர்களாவர். அவர்களில் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த அனுநாயக்கர் வெந்தருவ உபாலி தேரரும் ஒருவர்.
ஏனைய உறுப்பினர்களில் தொல்பொருள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கலாநிதி சிரான் தெரணியகவும் உள்ளடங்கியுள்ளார்.